விண்ணை முட்டும் விலை 7000 டன் வெங்காயம் இறக்குமதி தனியார் நிறுவனங்கள் முடிவு ஏற்றுமதிக்கு தற்காலிக தடை
புதுடெல்லி:இந்தியாவில் வராலாறு காணாத வகையில் வெங்காய விலை உயர்ந்ததை அடுத்து ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் வியாபாரிகள் 7000 டன் வெங்காயத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.இந்தியா முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தற்காலிகமாக அடுத்த 15 நாட்களுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. விலை உயர்வால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் வெங்காய சில்லரை விலை கிலோவுக்கு ரூ.60ல் இருந்து ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் ரூ.56 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.60 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் வெங்காய விலை கிலோ ரூ.75ஐ எட்டியது.
இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், நுகர்பொருள் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே பாகிஸ்தான், சீனா, ஈரான், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து கே.வி.தாமஸ் கூறுகையில், வெங்காயம் ஏற்றுமதியை கட்டுப்படுத்த குறைந்தபட்சம் டன்னுக்கு 650 டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சமாளித்து வெங்காய வரத்து அதிகரிக்க செய்யப்படும் என்றார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தனியார் வியாபாரிகள் வெங்காயம் இறக்குமதி செய்ய சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலைமையை சமாளிக்க டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தனியார் வியாபாரிகள் வெளிநாடுகளில் இருந்து 7000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர் என்றனர்.