காரைக்கால்:புதுச்சேரியை சேர்ந்தவர் பாஸ்கர் (38). கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு காரைக்கால் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை பரோலில் அழைத்து செல்ல கடந்த 8ம் தேதி நண்பர்கள் புதுச்சேரியை சேர்ந்த சுரேஷ், ஒல்லி சரவணன், வேல்முருகன், ஆடு சரவணன், புருஷோத்தமன், கார்த்திக், பிரகாஷ் மற்றும் சதீஷ் ஆகிய 8 பேர் 2 காரில் காரைக்கால் வந்தனர். பாஸ்கரை அழைத்துக் கொண்டு புதுச்சேரி புறப்பட்டனர்.
அப்போது, சுரேஷ், பாஸ்கரிடம் துப்பாக்கி ஒன்றை கொடுத்தபோது, அது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் பிரகாஷ், அவரது நண்பர் கார்த்திக், சதீஷ் ஆகியோர் காயமடைந்தனர். இவர்களில் பிரகாஷை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு தப்ப முயன்றபோது, கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கடந்த 11ம் தேதி புதுச்சேரியில் பதுங்கி இருந்த புருஷோத்தமன், பாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 6 பேரை தேடி வந்த நிலையில், புதுச்சேரியை சேர்ந்த சரவணன், சுரேஷ், சதீஷ், வேல்முருகன் ஆகிய 4 பேர் காரைக்கால் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.