திருப்பதியில் பக்தர்களிடம் 200 அமெரிக்க டாலர் திருட்டு
திருமலை: திருப்பதி கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வந்த பக்தர்களிடம் 200 டாலர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிலர் நேற்று தரிசனம் செய்ய வந்தனர். சுபதம் நுழைவு வாயிலில் தங்களது பாஸ்போர்ட்டை காண்பித்து மகா துவாரம் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்து உண்டியல் அருகே வந்து பார்த்த போது தாங்கள் கொண்டு வந்திருந்த 200 அமெரிக்க டாலர்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தேவஸ்தான பணியாளர்களிடம் கூறிவிட்டு வெளியே வந்து விட்டனர்.
தகவலறிந்த தேவஸ்தான உதவி பாதுகாப்பு அலுவலர் விசுவநாத் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களிடம் சோதனையை மேற்கொண்டனர். இதுகுறித்து உதவி பாதுகாப்பு அலுவலர் விசுவநாத் கூறுகையில், Ôபக்தர்கள் கொண்டு வந்த 200 டாலர் திருட்டு போனது உண்மை. ஆனால், அவர்கள் காவல் நிலையத்திலோ, தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளிடமோ எவ்வித புகாரும் கொடுக்கவில்லை. இருப்பினும், தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்களிடம் சாதாரண சோதனை நடத்தப்பட்டது. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதுÕ என்றார்.