கலசப்பாக்கம் அருகே துணிகரம் : லாரி உரிமையாளர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை, பணம் திருட்டு
கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார்(30), லாரி உரிமையாளர். இவர் சென்னையில் மற்றொருவரது கன்டெய்னர் லாரியில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஈஸ்வரி (19). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்களாகிறது. கடந்த 12ம் தேதி சசிகுமார் சென்னைக்கு லாரி ஓட்ட சென்றுவிட்டார். வீட்டில் இருந்த ஈஸ்வரி நேற்றிரவு கதவை பூட்டிவிட்டு பக்கத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு உறங்க சென்றார். இன்று காலை வீட்டுக்கு வந்த ஈஸ்வரி, கதவை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது வெளிப்புற ஜன்னல் கழற்றப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 15 சவரன் நகை, ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். திருட்டு போனவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம். நேற்றிரவு வீட்டின் பின்புறம் வந்த மர்ம நபர்கள் ஜன்னலில் இருந்த ஸ்குரூவை கழற்றி ஜன்னலை தனியாக எடுத்து வைத்துவிட்டு வீட்டுக்குள் புகுந்து பீரோவில் நகை, பணம் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசில் இன்று காலை ஈஸ்வரி புகார் செய்தார். போளூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களுக்கு பீரோ சாவி வைத்துள்ள இடம் தெரிந்துள்ளது. இதனால் வழக்கமாக வந்து செல்பவர்கள்தான் திருட்டில் ஈடுபட்டிருப் பார்கள் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.