பழி வாங்கும் உணர்ச்சி இருந்தால் நிம்மதியாக தூங்க முடியாது. படுத்தாலும் எப்படி பழி வாங்குவது என்ற எண்ணம்தான் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். எதிரிகளால் தாக்கப்பட்டு கோமா நிலையில் இருந்திருக்கிறார் ஒருவர். 3 மாதம் கழித்து கோமாவில் இருந்து மீண்டதும், தேடிப் போய் தன்னை தாக்கியவனை கத்தியால் குத்தி கொன்று விட்டார். கோமாவில் இருந்து மீண்ட அவர் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
புனே சகியோக் நகரை சேர்ந்தவர், மகாவீர் ஓவல். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த தீபக் சோனாவானே என்பவருக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன் தீபக்கும் அவருடைய சகோதரர்களான ஜித்தேந்திரா மற்றும் ஆகாஷும் கூர்மையான ஆயுதங்களால் ஓவலை தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஓவல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 சகோதரர்களையும் கைது செய்தனர். ஆனால் ஆகாஷும், தீபக்கும் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஓவல், கோமா மயக்கத்தில் இருந்து எழுந்தார். உடனே தன்னை தாக்கி கோமாவில் படுக்க வைத்தவர்களை பழிவாங்க துடித்தார். எனவே தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து தீபக்கை தேடினார். சம்பவத்தன்று வர்ஜே பாலம் அருகில் தீபக்கை பார்த்தனர். உடனே 4 பேரும் கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த தீபக் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். போலீசார், ஓவலையும் மண்டர் ஜோஷி என்பவனையும் கைது செய்தனர்.
கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடுதான் உட்காருவான் என்பது பழமொழி. பழிக்குப் பழியாக நடக்கும் கொலைக்கு முடிவே கிடையாது. இரு தரப்பிலும் அடுத்தடுத்து கொலைகள் விழுந்து கொண்டே இருக்கும். யாரும் நிம்மதியாக தூங்க முடியாது. தனியாக ஒரு இடத்துக்கு போக முடியாது. எல்லோரையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க வேண்டியிருக்கும். சொந்த பந்தங்களோடு கலந்து பழக முடியாது. சொந்த மனைவியையே நம்ப முடியாமல், எப்போது யார் மூலம் தனக்கு மரணம் வருமோ என்ற பயத்திலேயே வாழ வேண்டியிருக்கும். கத்தியை எடுத்துவிட்டால் சுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காலி செய்து விடுவார்கள்.