சீர்காழிக்கு வரவில்லை காவிரி நீர் குடத்தில் கொள்ளிடம் நீர் எடுத்து வந்து போராட்டம் கழுமலை ஆற்றில் ஊற்றினர்
சீர்காழி:சீர்காழிக்கு இதுவரை காவிரி நீர் வராததை கண்டித்து, கொள்ளிடம் நீரை குடத்தில் எடுத்து வந்து கழுமலை ஆற்றில் ஊற்றி விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.சம்பா சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து கடந்த 2ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், கடைமடை பகுதியான நாகை மாவட்டம் சீர்காழிக்கு இதுவரை வரவில்லை. இதனால் சீர்காழி கழுமலை ஆற்று பாசன விவசாயிகளால் நடவு பணி தொடங்க முடியவில்லை. ஆற்றில் தண்ணீர் திறக்காத அதிகாரிகளை கண்டித்தும், அவர்களை இடமாற்றம் செய்ய கோரியும், கொள்ளிடம் நீரை குடத்தில் கொண்டு வந்து கழுமலை ஆற்றில் ஊற்றி பொதுப்பணித் துறை அதிகாரிகளை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராமானுஜம், பாஸ்கரன் ஆகியோர் கூறுகையில், ஒரு லட்சம் கன அடி நீர், கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பாசனத்துக்கு திருப்பி விட்டால், இந்த ஆண்டு சம்பா நடவுக்கு தேவையான நீர் கிடைத்திருக்கும். பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியத்தால் தண்ணீர் முழுவதும் வீணாக கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் இதே நிலைதான். டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் அணை கரையில் இருந்து மகேந்திரபள்ளி வரை உள்ள கொள்ளிடம் ஆற்றில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தேக்க வேண்டும். சீர்காழி கடைமடை பகுதிக்கும் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.