சென்னை:அடையாற்றில் குதித்து தற்கொலை செய்ததாக சந்தேகப்பட்ட நபர், திருவண்ணாமலையில் இருந்து செல்போனில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையின் தற்கொலை பகுதியாக கோட்டூர்புரம் அடையாறு மாறிவருகிறது. ஆற்றில் குதித்தவர்கள் யாரும் சமீபகாலங்களில் உயிருடன் மீட்கப்படவில்லை. இந்த பகுதியில் சேறு அதிகமாக இருப்பதால் நீச்சல் தெரிந்தால் கூட தப்பிக்க வழியில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 3 பேர் அந்த இடத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் கோட்டூர்புரம் பாலம் அருகே வந்த டிப்டாப் நபர் ஒருவர் சாலையோரம் தனது பைக்கை நிறுத்தியுள்ளார். பாலத்தில் நின்று கொண்டு தனது செருப்பை கழற்றி குதிப்பது போன்று நின்று கொண்டிருந்தார். அவரது செயல்பாடுகள் அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் திடீரென அவரை காணவில்லை. அவரது பைக் மற்றும் செருப்பு ஆகியவை பாலத்தின் ஓரம் அனாதையாக கிடந்தது. பைக்கில் வந்த டிப்டாப் நபர் என்ன ஆனார் என்பது கேள்விக்குறியானது. தகவல் கிடைத்ததும், போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். ரப்பர் படகில் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் குதித்தவர் பற்றிய தகவலோ, அவரது சடலமோ கிடைக்கில்லை. நேரம் இருட்டியதால் மீட்பு பணியை காலையில் தொடங்க நினைத்தனர். அதற்குள் பைக் மற்றும் செருப்பை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தபட்டவர் கோட்டூர்புரத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுபாஷ் என்பது தெரியவந்தது. இதை அறிந்த அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதனர். நேற்றும் சுபாஷை தேடும் பணி நடந்தது.
நேற்று முழுவதும் தேடியும் சடலம் எதுவும் மீட்கப்படவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை உறவினர் ஒருவரது செல்போனுக்கு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்ததாக கருதப்பட்ட சுபாஷ் பேசினார். இது தொடர்பாக போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். சுபாஷிடம் செல்போன் மூலம் போலீசார் பேசினர். அப்போது அவர் கூறுகையில், ‘’எனக்கு திருமணமாகி குழந்தை இல்லை. இந்நிலையில், என்னை பாசமாக வளர்த்த தந்தையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இப்படி கடும் மன உளைச்சலில் இருந்த நான் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து குதிக்க சென்றபோது திடீரென மனம் மாறி பைக் மற்றும் கழற்றி வைத்த செருப்பையும் விட்டுவிட்டு திருவண்ணாமலை சென்று விட்டேன்’’ என்று கூறியுள்ளார்.
சொகுசு காரால் பரபரப்பு கோட்டூர்புரம் பாலம் அருகில் அனாதையாக ஒரு சொகுசு காரும் நின்று கொண்டிருந்தது. அந்த கார் யாருடையது? அதில் வந்த நபர் என்ன ஆனார்? அந்த நபர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என போலீ சார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.