சித்தூர்: ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, ஆந்திராவை பிரிக்கக் கூடாது என வலியுறுத்தி, கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் கடந்த 9 நாட்களாக பந்த் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது. ரம்ஜான் பண்டிகைக்காக நேற்றும், இன்றும் பந்த் விலக்கிக் கொள்ளப்பட்டது. எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்து வருகின்றனர். மத்திய அரசின் முடிவு பற்றி கருத்து கூறாமல் இது வரை மவுனம் சாதித்து வந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தற்போது தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் நேற்றிரவு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது: ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டால் விவசாய சாகுபடிக்கான தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை பகிர்வதில் பிரச்னை எழும். ஐதராபாத் நிலை, அரசு ஊழியர்கள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் உள்ளன. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் மத்திய அரசு தீர்வு கண்ட பிறகுதான் மாநிலத்தை பிரிக்க முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது.
ஒரு சிறிய பிரச்னையை தீர்க்க, பெரிய பிரச்னையை உருவாக்கிக் கொள்ள கூடாது. தற்போது மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டிக்கு மாநிலத்தை பிரிப்பதன் மூலம் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அரசு ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆந்திர மாநிலம் உருவாக பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
மாநில தலைநகரமான ஐதராபாத்தில் பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நம்பிக்கையுடன் பல்வேறு முதலீடுகளை செய்துள்ளனர். இதனால் தனியார் துறை தொழிற்சாலைகள், சாப்ட்வேர் நிறுவனங்கள் போன்ற துறைகள் வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் குழந்தைகளின் கல்விக்காக பலர் ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
பல லட்சம் மக்கள் பிழைப்பு தேடி இங்கு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால் திடீரென ஐதராபாத் உங்களுக்கு சொந்தம் இல்லை என்று சொன்னால் மனரீதியாக ஒப்புக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து பிரச்னைகளுக்கும் முதலில் தீர்வு காண வேண்டும். ஒரு மாநில முதல்வராக மாநிலம் பிரிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள், 'Ôநீங்கள் ராஜினாமா செய்வீர்களா' என கேட்டதற்கு 'கட்சி மேலிடத்திற்கு கட்டுப்பட்டு இருப்பதால் நான் ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை' என்றார். முதல்வரின் இந்த பேச்சு தெலங்கானா மாவட்ட மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'நடுநிலையாக இருக்க வேண்டிய முதல்வர், ஆந்திர மாநிலத்தை பிரிக்கக்கூடாது என வலியுறுத்துவதா' எனக்கூறி முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் உருவபொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.