பாகிஸ்தானில் 3 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட கிலானியின் மகன் எங்கே? தீவிரவாதிகள் பரபரப்பு தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 3 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பதவி இழந்தார். அதன்பின் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. கடந்த மே மாதம் 2ம் தேதி முல்தான் நகரில் தேர்தல் பிரசாரம் நடந்த போது, கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானியை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். அதன்பின், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. போலீசாரும் ராணுவத்தினரும் தொடர்ந்து அலி ஹைதரை தேடி வந்தனர்.
இந்நிலையில், அல் மன்சூரின் என்ற தீவிரவாத அமைப்பு, அலி ஹைதரை கடத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளது. இந்த அமைப்பின் பிரிகேட் என்று கூறி கொண்டு அபு யாசீத் என்பவர் தனியார் டிவி சேனலை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, அலி ஹைதர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளார். அவர் பத்திரமாக இருக்கிறார். ரம்ஜான் பண்டிகை (நாளை) முடிந்த பிறகு விரைவில் அவரது வீடியோவை வெளியிடுவோம். அதில் எங்கள் கோரிக்கைகளையும் தெரிவிப்போம் என்று தீவிரவாத அமைப்பின் பிரிகேட் அபு யாசீத் கூறியுள்ளார். முன்னாள் பிரதமரின் மகன் கடத்தப்பட்ட 3 மாதங்கள் ஆன நிலையில் இப்போது அவரை பற்றி தவகல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.