திருத்தணி:திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி இணை செயலாளராக இருந்தவர் பசும்பொன்ராஜா (32). திருத்தணி பெரிய தெருவில் வசித்து வந்த இவர்,கூரியர் சர்வீஸ் மற்றும் கோணி வியாபாரம் செய்துவந்தார். தனது கூரியர் சர்வீசில் வேலை செய்த சரண்யா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் உள்ள நெல் விதை கிடங்கு அருகே நேற்று முன்தினம் இரவு தலை, கழுத்தில் வெட்டுக் காயத்துடன் பசும்பொன் ராஜா இறந்து கிடந்தார்.திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதல் திருமணம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டி காரணமா என்று தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலை யில், சரண்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் பசும்பொன்ராஜாவை கொலை செய் தது தெரியவந்தது.திருத்தணியை சேர்ந்த சசி என்பவரும் சரண்யா வும் காதலித்துள்ளனர். அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, பசும்பொன்ராஜாவை சரண்யா காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின் மீண்டும் சசியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் அடிக்கடி செல்போனில் சரண்யா பேசியிருக்கிறார். இதுபற்றி பசும்பொன்ராஜாவுக்கு தெரிய வந்ததும் சசியை நேரில் சந்தித்து எச்சரித்துள்ளார். மேலும் சசியுடன் பேசக்கூடாது என்று மனைவியையும் கண்டித்துள்ளார். இதனால் சசிக்கும் பசும்பொன்ராஜாவுக்கும் மோதல் ஏற்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் சசிக்கு ஆதரவாக சரண்யா செயல்பட்டு உள்ளார்.
இதுசம்பந்தமாக சசிக்கும் பசும்பொன்ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது சசியை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சரண்யா, கள்ளக்காதலன் சசி மூலம் அவரது நண்பர்களான ஆட்டோ டிரைவர்கள் நாகராஜ், சுகுமார் ஆகியோரை கூலிப்படையாக பயன்படுத்தி பசும்பொன்ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அவர் எங்கு செல்கிறார் என்று கண்காணித்து வந்துள்ளனர்.நேற்று முன்தினம் அகூரில் உள்ள தனது கோணி கடையில் இருந்து வீட்டுக்கு திரும்பிய பசும்பொன்ராஜாவை வழி மறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருத்தணி காவல் நிலையத்தில் வைத்து சரண்யாவிடம் இன்ஸ்பெக்டர் கங்காதரன், எஸ்ஐக்கள் டில்லிபாபு, மூர்த்தி, செங்கல்வராயன், கன்னியப்பன் ஆகியோர் விசாரிக்கின்றனர். மேலும், பசும்பொன்ராஜா கொலையில் சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.