சேலம் வக்கீல் கொலையில் திடீர் திருப்பம் கண்காணிப்பு கேமராவில் ஆதாரம் சிக்கியது.
சேலம்:சேலம் வக்கீல் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கண்காணிப்பு கேமராவில் ஆதாரம் சிக்கி உள்ளது. இதனை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.சேலம் பிரஸ்ட் ரோட்டை சேர்ந்த வக்கீல் இளம்வழுதி (45). நேற்று முன்தினம் வாக்கிங் சென்றபோது, கலெக்டர் அலுவலகம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வக்கீல் இளம்வழுதியின் நண்பர்கள், உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. வக்கீல் இளம்வழுதி கந்துவட்டி தொழில் செய்து வந்துள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிரிக்கெட் நடக்கும் நேரத்தில் சென்னையில் முகாமிடும் வக்கீல் இளம்வழுதி, ரூ. 25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பந்தயம் கட்டுவார் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சம்பவம் நடந்த இடம் அருகே பெட்ரோல் பங்க் உள்ள கண்காணிப்பு கேமராவில் தனிப்படை போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அதில் சம்பவ நாளன்று, குறிப்பிட்ட நேரத்தில் அவ்வழியாக 3 மணல் லாரிகள் சென்றுள்ளது பதிவாகியிருக்கிறது. எனவே வக்கீல் இளம்வழுதி மணல் லாரி மோதி இறந்திருப்பாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக சென்ற லாரிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரவுடிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.