திருவனந்தபுரம்:கேரளாவில் பிரபல துபாய் தொழிலதிபரை முகமூடி கொள்ளை கும்பல் வீடு புகுந்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு, பணம், நகைகளை கொள்ளை அடித்து சென்றது.கேரள மாநிலம், காசர்கோடு அருகே உள்ள திருக்கரிப்பூர் வெள்ளாப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம் (58). இவருக்கு சுபைதா என்ற மனைவியும், சுபியான் என்ற மகனும், சபானா என்ற மகளும் உள்ளனர். அப்துல் சலாம் துபாயில் ஓட்டல் உள்பட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அப்துல் சலாம் கடந்த வாரம் ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்ற அவர், நள்ளிரவு 12 மணியளவில் வீடு திரும்பினார். இவரது வீட்டில் அதிகாலை 1 மணியளவில் காலிங்பெல் அடித்தது. அப்துல்சலாமின் மகள் சபானா கதவை திறந்தார். அப்போது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் ரம்ஜான் பண்டிகை தொடர்பாக நன்கொடை வசூலிக்க வந்ததாக தெரிவித்தனர். சபானா தனது தந்தையை அழைத்து வருவதற்காக வீட்டிற்குள் சென்றார். இந்த நேரத்தில் அந்த கும்பல் அனைவரும் முகமூடி அணிந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராக்களை அடித்து நொறுக்கிய அவர்கள், அப்துல் சலாமை நாற்காலியால் தலையில் அடித்தனர். மேலும் அப்துல்சலாமின் மனைவி, மகன், மகளை தாக்கிய அந்த கும்பல், அவர்களை வீட்டின் ஒரு அறையில் போட்டு பூட்டினர். பின்னர் அந்த கும்பல் அப்துல் சலாமை செல்லோ டேப்பால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து கொண்டு காரில் தப்பியது. தகவலறிந்ததும் காசர்கோடு எஸ்.பி. தாம்சன் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். உடைக்கப்பட்ட கேமராக்களில் கொள்ளையர்களின் படம் பதிவாகி உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை கும்பலில் மொத்தம் 10 பேர் இருந்ததாகவும், அவர்கள் மலையாளம் மற்றும் இந்தியில் பேசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் காசர்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.