துரைப்பாக்கம்:முட்டுக்காடு அருகே மாடு குறுக்கே பாய்ந்ததால், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் இருந்த 2 வாலிபர்கள் உடல் நசுங்கி இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கண்ணன்குடில் பகுதியை சேர்ந்தவர்கள் மணிமாறன் (29), சதீஷ்குமார் (27), லட்சுமிகாந்தன் (29), சரவணன் (28), இளையராஜா (28). இவர்கள் 5 பேரும் ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தனர். எல்லாரும் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். நேற்றிரவு முட்டுக்காட்டில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க காரில் புறப்பட்டனர். டிக்கெட் கிடைக்காததால் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
முட்டுக்காடு பஸ் நிறுத்தம் அருகே வேகமாக வந்தபோது, திடீரென மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காததால் திடீர் பிரேக் போட்டு காரை நிறுத்த முயன்றனர். கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், எதிர்திசையில் பாய்ந்து மின்கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் இருந்த மணிமாறன், சதீஷ்குமார் இருவரும் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் பலத்த காயத் துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
விபத்தை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் ரவிக்குமரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாடுகளால் விபத்து
திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஈசிஆர் சாலையில் சென்டர் மீடியன் உள்ளது. அதற்கு பிறகு தமிழ்நாடு எல்லை வரை சென்டர் மீடியன் கிடையாது. இப்பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இரவு நேரத்தில் மாடுகள் கண்டபடி சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. போக்குவரத்து போலீசார் சரியான முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என்று அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர். ரோந்து பணியை முடுக்கிவிட்டு, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் எனவும் கோருகின்றனர்.