டெல்லியில் பட்டப்பகலில் துணிகரம் துப்பாக்கி முனையில் ஊழியரை மிரட்டி ஏடிஎம்மில் 39 லட்சம் கொள்ளை
புதுடெல்லி:டெல்லியில் ஏடிஎம்மில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.39 லட்சம் பணத்தை மர்மநபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப¢பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் வைக்கும் பணியை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் கவச வாகனங்களில் செக்யூரிட்டி துணையுடன் சென்று ஏடிஎம்களில் பணத்தை வைத்து வருவது வழக்கம். டெல்லி மானசரோவர் பார்க் பகுதியில் உள்ள யூனியன் வங்கி ஏடிஎம்களில் பணத்தை வைப்பதற்காக நேற்று காலை 11 மணிக்கு பணம் வைக்கும் நிறுவன ஊழியர்கள் ரூ.39 லட்சத்துடன் வேனில் புறப்பட்டனர். துணைக்கு ஷாகப் சிங்(50) என்ற முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் துணைக்கு வந்தார். மானசரோவர் பூங்கா ஏடிஎம் வந்தவுடன் பணத்துடன் 2 ஊழியர்கள் உள்ளே சென்றனர். செக்யூரிட்டியும் உடன் சென்றார்.
அப்போது திடீரென மர்மநபர்கள் துப்பாக்கியுடன் ஏடிஎம் உள்ளே புகுந்தனர். செக்யூரிட்டியை மடக்கி அவரிடமிருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டனர். பின்னர் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஊழியர்களிடமிருந்த ரூ.39 லட்சத்தை பறித்துக் கொண்டு தயாராக இருந்த காரில் ஏறி தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் தனியார் நிறுவன வாகனத்தை நீண்ட நேரமாக ஒரு கார் பின்தொடர்ந்து வந்தது தெரியவந்தது. நிறுவன ஊழியர்களிடமும் செக்யூரிட்டியிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.