யாராவது நம்மை பற்றி அவதூறாக பேசினால் எவ்வளவு கோபம் வரும்? அதே போல்தான் அடுத்தவர் பற்றி நாம் பேசினாலும் அவர்களுக்கு வரும். ஆனால் பலர் அதுபற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. வாயில் வந்தபடி கேட்டது, கேட்காதது, பார்த்தது, பார்க்காதது என அனைத்தையும் சேர்த்து இட்டுக் கட்டி இஷ்டத்துக்கு வதந்தி பரப்புவார்கள். யாரோ அதுபோல் செய்தால் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம். சொந்தபந்தமே செய்தால் எப்படி மன்னிக்க முடியும். கணவனின் தங்கையின் நடத்தை குறித்து அவதூறு பரப்பியிருக்கிறார் அண்ணி. ஆத்திரமடைந்த அண்ணன், மனைவி என்றும் பார்க்காமல் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொன்று விட்டார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த சேகல் சுந்தரபுரியை சேர்ந்தவர் மணிமேகலை. இவருடைய மகள் தங்கம். தங்கத்தின் கணவன் வடிவழகன். வடிவழகனின் தங்கை வைஜெயந்தி. கணவரை பிரிந்து அண்ணன் வீட்டில் வசிக்கிறார். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில் வைஜெயந்தியின் நடத்தை குறித்து தங்கம் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதையறிந்த வடிவழகன் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கையை பற்றி எப்படி அவதூறாக பேசலாம் என தங்கத்தை திட்டி, அடித்து உதைத்துள்ளனர். அடி தாங்க முடியாமல் தப்பி ஓடியிருக்கிறார் தங்கம். ஆனாலும் விடாமல் துரத்தியுள்ளனர். பக்கத்தில் உள்ள திடலில் தங்கத்தை மடக்கி பிடித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் உடல் கருகிய தங்கம் அதே இடத்தில் இறந்தார். பின்னர் யாருக்கும் தெரியாமல் அவரது சடலத்தை சுடுகாட்டில் எரித்துவிட்டனர். மகளின் மரணம் குறித்து அறிந்த மணிமேகலை, இதுபற்றி திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, வடிவழகனை கைது செய்தனர். அவரது தந்தை ஜெயபால், தாய் தவமணி, தங்கை வைஜெயந்தி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
அடுத்தவர் பற்றி இல்லாததும் பொல்லாததும் பேசுவது என்றுமே பிரச்னையைத்தான் தரும். வதந்தி பரப்புவது யார் எனத் தெரிந்துவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சும்மா விட மாட்டார்கள். எதற்கு தேவையில்லாத பிரச்னை. பேசாத வார்த்தைக்கு நாம்தான் எஜமானர். பேசிய வார்த்தைக்கு அப்படி அல்ல. அதனால் வரும் அத்தனை பிரச்னைகளையும் சந்தித்துத்தான் ஆக வேண்டும். எனவே தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தாலே பாதி பிரச்னைகள் வராது.