பீகாரில் 23 மாணவர்கள் பலியானதற்கு பெண் தலைமை ஆசிரியரே பொறுப்பு விசாரணை குழு அறிக்கை
பாட்னா:பீகார் மாநிலத்தில் அரசு தொடக்க பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 23 பேர் பலியானதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் அவரது கணவரே முழு பொறுப்பு என உயர் மட்டக்குழு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவர்கள் ரத்த வாந்தி எடுத்த மயங்கி விழுந்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றியும் 23 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சரண் மாவட்ட கலெக்டர் மற்றும் சரண் மாவட்ட போலீஸ் ஐஜிக்கு முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டார். இந்த இரண்டு அதிகாரிகளும் சம்பவம் நடைபெற்ற கிராமத்துக்கு விரைந்து பல தரப்பு மக்களிடம் விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர். பள்ளியின் ஆசிரியர்களிடமும் விசாரணை நடைபெற்றது. இதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு நேற்று முதல்வர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த அறிக்கையில், தலைமை ஆசிரியர் மீனா தேவி மற்றும் மதிய உணவுக்கு எண்ணெய் மற்றும் அரிசி வழங்கிய கடையின் உரிமையாளரான தலைமை ஆசிரியர் மீனா தேவியின் கணவர் அர்ஜுன் ராய் முழு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தலைமறைவான மீனாதேவி மற்றும் அவரது கணவர் தொடர்ந்து போலீசில் சிக்காமல் உள்ளனர். மீனாதேவியின் உறவினர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தனிப்படைகள் அந்த இடங்களுக்கு விரைந்துள்ளது. அவரது வீட்டையும் போலீசார் கண்காணித்து வருவதாக மாவட்ட எஸ்பி சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.