அனுப்பர்பாளையம்:திருப்பூரில் தறிகெட்டு ஓடிய பஸ், வீட்டுக்குள் புகுந்ததில் தூங்கி கொண்டிருந்த தாய், மகள் உடல் நசுங்கி பலியாயினர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.திருப்பூர் பிஎன் ரோடு அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் வெள்ளியங்கிரி (40). அண்ணா நகர் பஸ் ஸ்டாப் டிரான்ஸ்பார்மர் அருகே கோழிக்கடை வைத்துள்ளார். கோழிக்கடைக்கு பின்புறம் இவரது வீடு உள்ளது. வெள்ளியங்கிரியின் மனைவி தேவி (34), மகள் பவளக்கொடி (4), மகன் மோகன் (8) ஆகியோர் நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். வெள்ளியங்கிரி கடைக்கு சென்று விட்டார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் பனியன் நிறுவன பஸ் ஒன்று 30 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு பெருமாநல்லூருக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை சத்தியமங்கலத்தை சேர்ந்த டிரைவர் அமல்ராஜ்(45) ஓட்டினார். எதிரே வந்த ஒரு வாகனம் மீது மோதாமலிருக்க பஸ்சை டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் வெள்ளியங்கிரியின் கோழிக்கடை மீது மோதி, அருகில் இருந்த அவரது வீட்டுக்குள் பாய்ந்தது. தூங்கி கொண்டிருந்த தேவி மற்றும் மகள் பவளக்கொடி ஆகியோர் நசுங்கி அதே இடத்தில் பலியாயினர்.
சிறுவன் மோகன், பஸ்சில் இருந்த பனியன் தொழிலாளர்கள் திருப்பூர் தொரவலூரை சேர்ந்த மோகன் (38), நம்பியூர் மாணிக்கம்மாள் (40), காசிபாளையம் தேவி (24), சொக்கனூர் அரிச்சந்திரன், அரசூர் வடிவேல், கெட்டிசெவியூர் நந்தகுமார் (29), கோபி மஞ்சுளா (39), நம்பியூர் செல்வி (35), டிரைவர் அமல்ராஜ் உள்பட 13 பேர் படுகாயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி இருந்தால் பஸ் தீப்பிடித்து அதிக உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். டிரைவர் அமல்ராஜ் மீது பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.