நெல்லை: டோல்கேட் கண்காணிப்பாளரை துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நெல்லை மேற்கு மாவட்ட தேமுதிக பிரமுகர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.சுரண்டையை சேர்ந்தவர் கோதை மாரியப்பன் (61). தேமுதிக மேற்கு மாவட்ட அவைத்தலைவர். இவர் வள்ளியூரில் கடந்த 2ம் தேதி தேமுதிக மே தின பொதுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தார். காரை சுரண்டையை சேர்ந்த அந்தோணிசாமி (23) என்பவர் ஓட்டினார்.
நாங்குநேரி டோல்கேட் இருந்த கண்காணிப்பாளர் முத்தையா, டோல்கேட் கட்டணம் கேட்ட போது, ‘நாங்கள் தேமுதிகவில் முக்கிய பொறுப்பில் உள்ளோம், சுங்கவரி கட்டணம் செலுத்த முடியாது‘ என்று கூறி மாரியப்பன் தகராறு செய்தார். அப்போது துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டினார். நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி கோதை மாரியப்பனை கைது செய்து, பாளை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய எஸ்பி விஜயேந்திர பிதரி, கலெக்டர் சமயமூர்த்தியிடம் பரிந்துரை செய்தார். அதன்படி மாரியப்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.