லண்டன்: கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு மல்லாக்க கவிழும் மொடாக்குடியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல். குடியை குறைத்துக்கொள்ள உதவும் மாத்திரை இங்கிலாந்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.உலக மக்கள்தொகை இன்றைய நிலவரப்படி 711 கோடியை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் 200 கோடி பேர் குடிகாரர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலகம் முழுவதும் குடி காரணமாக 7.5 கோடிக்கும் அதிகமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உறுப்புகள் செயலிழந்து ஆண்டுதோறும் ஏறக்குறைய 30 லட்சம் பேர் இறக்கிறார்கள். கல்லூரி மாணவர்களில் சராசரியாக 40% பேர் குடிப்பவர்கள் என்றெல்லாம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குடிகாரர்கள் ஒரு பக்கம் குடும்பத்தை மறந்துவிட்டு ஆல்கஹாலில் மூழ்கிக் கொண்டிருக்க.. அவர்களை அதில் இருந்து மீட்க படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றன கோடிக்கணக்கான குடும்பங்கள். அலோபதி, ஓமியோபதி தொடங்கி ‘கட்டிப்புடி’ வைத்தியம் வரைகூட ‘குடியை மறக்க’ என்று சொல்லி மருந்து விற்கிறார்கள். அதை சாப்பிட்டு நிஜமாகவே குடியை மறந்ததாக விளம்பர நிகழ்ச்சிகளில் பலரது பேட்டிகளை பார்க்க முடிகிறது.
‘கொழுப்பு, உப்பு, காரம் உடம்புக்கு ஆகவில்லை என்றால், குறைத்துக்கொள்ளத்தானே டாக்டர் சொல்கிறார். குடியை மட்டும் ஒரேயடியாக நிறுத்துவானேன்’ இப்படி வருத்தப்படும் அன்லிமிடெட் குடிகாரர்களுக்கு சந்தோஷ தகவலாக வந்திருக்கிறது ‘குடி குறைப்பு’ மாத்திரை பற்றிய செய்தி.இந்த மாத்திரை பெயர் ‘நால்மிபீன்’ அல்லது ‘செலிங்க்ரோ’. நீண்ட கால தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு, டென்மார்க்கை சேர்ந்த லண்ட்பெக் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. விற்பனைக்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, இங்கிலாந்து சந்தையில் இந்த மாத்திரை நேற்று அறிமுகமானது. இதுபற்றி லண்ட்பெக் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
குடியை ஒரேயடியாக கைவிடுவதற்கான மாத்திரைகள் தற்போது உள்ளன. அதுபோல அல்லாமல், குடிக்கும் அளவை குறைத்துக் கொள்ளும் நோக்கில் நால்மிபீன் தயாரிக்கப்பட்டுள்ளது. குடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் ஒரு மாத்திரை கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. சராசரியாக தினமும் 12.75 யூனிட் வரை குடித்தவர்கள் இந்த மாத்திரை சாப்பிட்ட பிறகு, வெறும் 5 யூனிட்டோடு நிறுத்திவிட்டார்கள். இது 61 சதவீத குறைவாகும்.
டாக்டர்களின் கவுன்சலிங்குடன் 6 மாதம் இந்த மாத்திரையை சிலர் சாப்பிட்டு வந்தனர். மாதத்துக்கு 23 நாட்கள் அளவுக்கு அதிகம் குடித்து வந்த அவர்கள் சிகிச்சைக்கு பிறகு, மாதத்துக்கு 9 நாட்கள் மட்டுமே அவ்வாறு குடித்ததாக கூறினர். டாக்டர்களின் கவுன்சலிங்குடன் நால்மிபீன் மாத்திரையும் ஒழுங்காக சாப்பிட்டு வந்தால், குடிக்கும் அளவு கணிசமாக குறையும். மூளையில் சில மாற்றங்களை ஏற்படுத்ததுவதன் மூலம் குடி அளவை இது குறைக்கிறது. இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
நார்வே, பின்லாந்து, போலந்து உள்ளிட்ட நாடுகளில் ‘செலிங்க்ரோ’ மாத்திரைக்கு கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.