தக்கலை: தக்கலை அருகே புதிய விஏஓ கட்டிடத்தில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் நேற்று மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.குமரி மாவட்டத்தில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. தக்கலை பகுதியிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தக்கலை அருகே கோழிபோர்விளையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், முளகுமூடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டிடத்தில் நேற்று காலை மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது. அழகிய பாண்டியபுரம் வடக்கு தெருவை சேர்ந்த குமாரபிள்ளை (36), குலசேகரம் புதூரை சேர்ந்த சங்கர் (20) ஆகியோர் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
இந்நிலையில், கட்டிட கான்ட்ராக்டர், வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகளை மதியம் 2 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் செல்போனை அவர்கள் எடுக்கவில்லை. உடனே தொழிலாளர்களின் வீட்டுக்கு போன் செய்து பேசினார். அவர்கள் இன்னும் வேலை முடிந்து வரவில்லை என்று கூறினர். அதிர்ச்சி அடைந்த கான்ட்ராக்டர் மற்றும் ஊர் பொது மக்கள் இரவு 12 மணிக்கு மேல் கட்டிடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு யாரும் இல்லை. சங்கரின் செல்போனை தொடர்பு கொண்டார். அப்போது கட்டிடத்துக்குள் இருந்து செல்போன் ஒலித்தது.
இதனால் சந்தேகம் அடைந்தவர் பொது மக்கள் உதவியுடன் கட்டிடத்துக்குள் சென்று பார்த்தார். கட்டிடத்துக்குள் சங்கர் மற்றும் குமாரபிள்ளை ஆகியோர் மின்னல் தாக்கி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து தக்கலை போலீசார் விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.