சென்னையில் 18 சதவீதம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா அறிகுறி டீன் தகவல்
சென்னை: சென்னையில் 18 சதவீதம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா அறிகுறி இருப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது என்று டீன் கனகசபை தெரிவித்தார்.உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு பொது மருத்துவமனை காசநோய் & மார்பக நோய் துறை, அரசு நெஞ்சக மருத்துவமனை மற்றும் மாவட்ட காசநோய் மையம் இணைந்து இலவச ஆஸ்துமா பரிசோதனை முகாமை திருமுல்லைவாயலில் நேற்று நடத்தியது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை முகாமிற்கு தலைமை தாங்கினார். துறையின் இயக்குனர் மீனாட்சி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இலவச ஆஸ்துமா பரிசோதனை செய்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு டீன் கனகசபை அளித்த பேட்டி:
ஒவ்வொரு ஆண்டு மே 7ம் தேதி உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘நீங்கள் உங்களது ஆஸ்துமாவினை கட்டுப்படுத்த முடியும்‘ என்பதாகும். ஆஸ்துமா நோய் குழந்தைகளிடம் அதிக தாக்கத்தையும், அதன் தொடர்ச்சியாக பெரியவர்களிடமும் காணப்படுகிறது.
சென்னையில் எடுக்கப்பட்ட கணக்கெடு ப்பின்படி 18 சதவீதம் குழந்தைகளிடம் ஆஸ்துமாவிற்கான அறிகுறிகள் காணப்பட்டது. 5 சதவீதம் குழந்தைகளிடம் ஆஸ்துமா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆஸ்துமாவின் அறிகுறிகள் நகர்புறத்தில் வாழும் 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளிடம் 22 சதவீதமும், கிராமங்களில் வாழும் 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளிடம் 9 சதவீதமும் காணப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.