நெடுஞ்சாலைகளில் இருக்கும¢ மதுக் கடைகளால் விபத்து அதிகம் நடப்பதை அறிந்த உயர் நீதிமன்றம், கடைகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனாலும் லாரி விபத்துகள் குறைந்தபாடில்லை. மது கிடைக்கும் இடத்தில் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, போகும் வழியில் ஏதாவது ஓட்டலில் நிறுத்தி குடித்து விட்டுத்தான் கிளம்புகிறார்கள். போதையில் கண்மண் தெரியாமல் ஓட்டி விபத்துக்குள்ளாகி விடுகிறார்கள். இப்படி நடந்த ஒரு விபத்தில் சிமென்ட் மூட்டைகளுக்கு இடையே சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை புறப்பட்ட சிமென்ட் லாரி ஒன்றில் கூலித்தொழிலாளர்கள் சிலர் ஏறிக்கொண்டனர். லாரியில் 13 பேர் பயணம் செய்தனர். அதிகாலை 2 மணியளவில் லாரியை ஒரு தாபா ஓட்டலில் நிறுத்திவிட்டு டிரைவரும் கிளீனரும் மது குடித்துள்ளனர். பிறகு போதையில் இருந்த கிளீனர் அதிவேகமாக லாரியை ஓட்டியுள்ளார். ஓங்கோல் அருகே நாற்கர சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிமென்ட் மூட்டை மீது அமர்ந்து வந்த 10 தொழிலாளர்களும் மூட்டைகளின் அடியில் சிக்கிக் கொண்டனர். கேபின் மீது அமர்ந்து வந்த 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. டிரைவரும், கிளீனரும் தப்பியோடிவிட்டனர்.
அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார், தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் ஆகியோர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிமென்ட் மூட்டைகளின் அடியில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 2 கிரேன் வரவழைக்கப்பட்டு சிமென்ட் மூட்டைகளை 4 மணி நேரம் போராடி அகற்றினர். அப்போது 10 தொழிலாளர்களும் மூட்டைகளுக்குள் சிக்கி மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்து கிடந்தனர். முதற்கட்ட விசாரணையில் குடிபோதையில் கிளீனர் அதிகவேகமாக ஓட்டியதால்தான் இந்த கோர விபத்து நடந்தது தெரிய வந்தது.
சாதாரணமாக கிளீனர் வண்டியை ஓட்டினாலே பிரச்னைதான். அதிலும் போதையில் ஓட்டினால் கேட்கவா வேண்டும். லாரியில் சென்றால் கட்டணம் குறைவு என்பதால் லாரியில் பயணம் செய்த 10 தொழிலாளர்களும் இறந்துவிட்டனர். உயிரை விடவா பணம் முக்கியம்? இதை ஏன் இன்னும் உணராமல் இருக்கிறார்களோ தெரியவில்லை.