கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை பிற்பகலில் முடிவு தெரியும்
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. மொத்தம் 224 தொகுதிகளில் 223 தொகுதியில் மட்டும் தேர்தல் நடந்தது. பிரியபட்னா தொகுதியில் பாஜ வேட்பாளர் இறந்துவிட்டார். இதனால் அங்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு வரும் 28ம் தேதி நடத்தப்படுகிறது. மொத்தம் 4.36 கோடி வாக்காளர்களில் 70.23 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8மணிக்கு தொடங்குகிறது. இந்த பணியில் 13 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் பணியை தேர்தல் ஆணையம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கும். அந்தந்த தொகுதிக்கான மத்திய பார்வையாளர்களும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பார்கள். அனைத்து மையங்களிலும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். முதலில் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு எண்ணப்படும். இதையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் முன்னிலையில் எண்ணப்படும். பகல் 11 மணியில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளிவரும். எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது பிற்பகலில் தெரிந்துவிடும்.