நொய்டா: ஏழை மக்களுக்காக குறைந்த விலை மதுவை உத்தர பிரதேச அரசு நேற்று அறிமுகப்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 1ம் தேதி முதல் மது விலை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து உள்நாட்டு மது, குவார்ட்டர் விலை ரூ.45ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்தது. அண்டை மாநிலமான அரியானாவில் குவார்ட்டர் மது விலை ரூ.30 ஆக உள்ளது. விலை குறைவாக இருப்பதால் உத்தர பிரதேச ÔகுடிÕமகன்கள் அரியானாவுக்கு படையெடுக்கின்றனர். மேலும் சிலர் மதுவை கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். மதுவில் கலப்படம் செய்தும் குறைந்த விலையில் விற்கின்றனர். இதனால் ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கருதிய மாநில அரசு, மது கடத்தலை தடுக்கவும் ஏழை மக்களுக்காகவும் குறைந்த விலை மதுவை நேற்று அறிமுகப்படுத்தியது. மாநில எல்லை பகுதிகளிலேயே இந்த மது கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நொய்டா கலால் வரித்துறை அதிகாரி குல்தீப் யாதவ் கூறுகையில், ‘வெளிமாநிலத்தில் இருந்து மதுவை கடத்தி வந்து விற்பதோடு, பணத்துக்கு ஆசைப்பட்டு அதில் கலப்படமும் செய்வதால் ஏழை மக்கள் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. இதை தடுக்க ஏழை மக்களுக்காக 25 ரூபாய்க்கு குவார்ட்டர் மது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மது கடத்தல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்கார், ஜீவார், ஜுந்த்புரா உள்ளிட்ட பகுதிகளில் மலிவு விலை மது கிடைக்கும்‘ என்றார். இந்த திட்டம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.