நீது சந்திராவின் காதல் முறிந்தது
மும்பை: 2 வருடமாக காதலித்த நடிகர் ரன்தீப் ஹூடா, நீது சந்திரா திடீரென்று பிரிந்தனர்.தமிழில் ‘யாவரும் நலம்‘, ‘தீராத விளையாட்டு பிள்ளை‘, ‘ஆதிபகவன்‘, ‘சேட்டை‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடாவுக்கும் 2 வருடத்துக்கு முன் காதல் மலர்ந்தது. இருவரும் பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றித்திரிந்ததுடன் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் நீது பேட்டி அளித்தபோது, ‘ரன்தீப்புடன் காதல் இருப்பது உண்மைதான். அவரை விரைவில் மணந்துகொள்வேன்‘ என்று உறுதியாக கூறினார்.
தொடக்கத்தில் நீதுக்கு பட வாய்ப்புகள் மிக குறைவாகவே இருந்தது. படிப்படியாக தமிழில் அவருக்கு படங்கள் வரத் தொடங்கியது. ‘ஆதிபகவன்‘ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் ரன்தீப்பிடம் இருந்து நீது ஒதுங்க ஆரம்பித்தார். இத்தனைக்கும் ரன்தீப் அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தன்னுடைய காதலி என்று பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்கள். திடீரென்று இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இது பற்றி ரன்தீப்பிடம் கேட்க முயன்றபோது அவரது தரப்பில் பதில் கூறப்பட்டது. ‘ரன்தீப் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதற்காக வெளியூர்களுக்கு சென்று வருகிறார். இது பற்றி அவர் பேசமாட்டார். ஆனால் அவர் நீதுவை பிரிந்தது உண்மைதான்‘ என்றனர்.