சென்னை: எச்.வசந்தகுமார் (தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவர்): பெண்கள், இளைஞர்கள், ஏழைய எளிய மக்கள் ஆகிய மூன்றுதரப்பு மக்களும் பயனடைய தயாரிக்கப்பட்ட பட்ஜெட் இது. பெண்கள் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழவும், இளைஞர்கள் பலதரப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையிலும், ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அவர்கள் கைகளுக்கே சென்றடைய உதவும் வகையிலும் தயாரிக்கப்பட்ட பட்ஜெட். குறிப்பாக சொல்லப்போனால் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பட்ஜெட் இது. பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் என்.ஆர்.தனபாலன்: இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்த்த எந்த சலுகையும் இல்லை. ஏதோ கண் துடைப்புக்கென்று அறிவித்திருக்கிற சலுகைகள் அடி மட்டத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு சென்றடையும் என்பதில் நம்பிக்கையில்லை. அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக அறிவித்திருப்பதால் சிறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுவது நிச்சயம். தமிழகத்திற்கு என்று புதிய திட்டங்கள் ஏதும் இல்லை.
விக்கிரமராஜா (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு): அந்நிய முதலீடு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று குறிப்பிட்ட நிதி அமைச்சர் இத்தனை வருடங்களாக பல்வேறு துறைகளில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளித்ததனால் நாடு பெற்றுள்ள வளர்ச்சி பற்றி குறிப்பிட முடியவில்லை. அன்னிய நிறுவனங்களை சில்லரை வர்த்தகத்தில் எளிதாக புகுத்த செபி சட்டம் திருத்தப்படும் என்று கூறியிருப்பது கவலைக்குரியது. பொது மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் ஏமாற்றம் தரும் பட்ஜெட். மொத்தத்தில் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மாயாஜால பட்ஜெட் மக்களுக்கு பயனளிக்காத பட்ஜெட். ரயில்வே பட்ஜெட் வரவேற்பு ஜெயதுரை எம்.பி.: ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலிடம் நேரில் வலியுறுத்தியதன் பேரில் திருச்செந்தூர்பழநி புதிய பாசஞ்சர் ரயில் விடப்படும் என்று 201314ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் (குருவாயூர் இணைப்பு) விட வேண்டும் என்று பன்சாலிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்த இணைப்பு ரயில் விட ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது வரவேற்கத்தக்கது.