அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட விவகாரம் : காஷ்மீர் சட்டமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்
ஜம்மு: அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது குறித்தும், அவரது உடலை திரும்ப பெற வலியுறுத்தியும் காஷ்மீர் சட்டமன்றத்தில் இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கொண்டுவந்துள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு கடந்த மாதம் திகார் சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் திகார் சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அப்சலின் உடலை அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டதன் மூலம் காஷ்மீர் குடிமக்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தூக்கு தண்டனை கைதிகள் வரிசையில் 28ம் இடத்தில் இருந்த அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது. ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது போல அப்சல் குருவுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன் என்ற கேள்வியை பிடிபி முன்வைத்துள்ளது. அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது தொடர்பாகவும், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பற்காக இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்கள் ஜனநாயக கட்சி நேற்று சபாநாயகரிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானங்கள் மீது இன்று விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் நயீம் அக்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.