2 மாதத்தில் அரசியல் கட்சி : பாபா ராம்தேவ் அறிவிப்பு
சண்டிகர்: ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக 2 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் யோகா மையம் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த பாஜ ஆட்சி காலத்தில் 28 ஏக்கர் நிலம் ராம்தேவின் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீர்பத்ரசிங் முதல்வரானவுடன் ராம்தேவுக்கு வழங்கப்பட்ட நிலம் திரும்ப கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த 2 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் ராம்தேவ் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த ஐகோர்ட் மறு உத்தரவு வரும் வரை பழைய நிலையே நீடிக்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சண்டிகரில் செய்தியாளர்களுக்கு ராம்தேவ் பேட்டி அளித்தார். அப்போது, இமாச்சல பிரதேசத்தில் தனது அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்கும் வரை ஓய மாட்டேன் என்றார். அடுத்த பொது தேர்தலில் மக்கள் வாக்களிக்க நல்ல மாற்று கட்சி இருக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இரண்டு மாதத்தில் புதிய கட்சி செயல்படும் எனவும் அறிவித்தார். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராடிய அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு ஆம் ஆத்மி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கிய நிலையில், தற்போது ராம்தேவும் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.