சென்னை-: இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து எம்எல்ஏக்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர். தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோயிலுக்கு வருவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். முன்னதாக இவர்கள் சட்டசபை நுழைவு வாயிலில் ராஜபக்சே வருகைக்கு எதிர்த்து தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஆறுமுகம் கூறுகையில், ‘‘இலங்கை தமிழர்கள் மீது இனப்படுகொலை நடத்திய ராஜபக்சேவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்திருப்பது கண்டிக் கத்தக்கது.
இதனை எதிர்த்து சட்டசபையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ராஜபக்சேவை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜபக்சே வருவது, உலக தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் இனத் துரோகம்’’ என்றார். புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி கூறுகையில், ‘‘இனவெறி பிடித்த ராஜபக்சே, இந்தியாவுக்குள் வருவது கண்டிக்கத்தக்கது. ஐ.நா.சபையில் மார்ச் 1ம் தேதி, இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பாக சர்வதேச போர் ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த நேரத்தில் ராஜபக்சே வருவது இனதுரோகமாகும்’’ என்றார்.