காணும் பொங்கல் உற்சாகம் காலையிலேயே பீச்சில் திரண்ட பொதுமக்கள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
காணும் பொங்கலையொட்டி மெரினா பீச், ஜெமினி சர்க்கஸ், தீவுத்திடல் அரசு பொருட்காட்சி, தீம் பார்க்குகள், கிழக்கு கடற்கரை சாலை நட்சத்திர ஒட்டல்களில் காலையிலிருந்தே பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.
விளையாட்டுப் போட்டிகள், இசை, நடன போட்டிகள், பெண்களுக்கான போட்டிகள், மாடுபிடி விளையாட்டுகள் என கிராமங்களில் பொங்கல் விழா களைகட்டியது. ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பில்லை என்பதால் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு இடமான சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை முதலே குடும்பம் குடும்பமாக குவியத் தொடங்கினர்.
கடற்கரைக்கு வந்த பெரும்பாலான குடும்பத்தினர் கையோடு சாப்பாடும் கொண்டு வந்திருந்தனர். அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவு இல்லங்கள், விவேகானந்தர் இல்லம் போன்றவற்றில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி நடக்கும் அரங்கிலும், ஜெமினி சர்க்கஸ் அரங்கிலும், மக்கள் திரண்டு வந்திருந்தனர். இளைஞர்களோ கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தீம் பார்க்குகளில் குவிந்தனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, குதிரைப்படை வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.