திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை நாளை
நடைபெறுகிறது. நாளை மாலை 6.30 மணியளவில் பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி
வடிவில் காட்சியளிப்பார். மகரஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையில் பக்தர்கள்
குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மற்றும்
மகரவிளக்கு பூஜை பிரசித்தி பெற்றது. கடந்த மாதம் 26ம் தேதி மண்டல பூஜை
நடந்தது. இதன்பிறகு மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த
மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது. 31ம் தேதி முதல் நெய் அபிஷேகம் உள்பட
சிறப்பு பூஜைகள் தொடங்கின. இவ்வருட மகரவிளக்கு பூஜை நாளை (14ம்தேதி)
நடைபெறுகிறது.
மகரவிளக்கு பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும்
பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நேற்று முன்தினம்
நடந்தது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு திருவாபரணம்
அணிவிக்கப்படுவது வழக்கம். திருவாபரணம் நேற்று பகல் 1 மணியளவில் பந்தளம்
சாஸ்தா கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. நாளை மாலை 3 மணியளவில் இந்த
திருவாபரணம் பம்பையை வந்தடையும். பம்பையில் தேவசம்போர்டு சார்பில்
வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பிறகு சரம்குத்தி வழியாக சன்னிதானத்திற்கு
கொண்டு செல்லப்படும். இதன் பிறகு திருவாபரணத்தை தந்திரி மற்றும் மேல்சாந்தி
ஆகியோர் கோயிலுக்குள் கொண்டு சென்று ஐயப்பனுக்கு அணிவிப்பார்கள். மாலை
6.30 மணியளவில் தீபாராதனை நடத்தப்படும். இந்த சமயத்தில் தான்
பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். மகரஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையில்
பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களாக சபரிமலை வரும்
பக்தர்கள் மகரஜோதி தெரியும் இடத்தில் குடில் கட்டி தங்கியுள்ளனர்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மகரஜோதி தினத்தன்று புல்மேட்டில் ஏற்பட்ட
நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இந்த
ஆண்டு நெரிசல் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சன்னிதானம், பம்பை, புல்மேடு ஆகிய இடங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook