விஐபி போலீஸ் பாதுகாப்பை குறைக்க மத்திய அரசு முடிவு : உள்துறை அமைச்சர் தகவல்
புதுடெல்லி: டெல்லியில் விஐபிக்களுக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் கடந்த 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். சுமார் 2 வாரங்கள் வரை மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து டெல்லியிலும், மற்ற நகரங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் விஐபிக்களுக்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு இருப்பதாகவும், பொது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்பட்டது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சுப்ரீம் கோர்ட்டும் நேற்று கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் விஐபிக்களுக்கு அளிக்கப்படும் போலீஸ் பாதுகாப்பு விரைவில் குறைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விஐபி பாதுகாப்பை குறைப்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் 2 தினங்களுக்கு முன்பு என்னிடம் பேசினர். இது தொடர்பாக உள்துறை செயலாளரிடம் பேசியுள்ளேன். விஐபி பாதுகாப்பு விவகாரத்தை கவனித்து வரும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் குழுவுக்கு இந்த பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் விஐபிகளுக்கான போலீஸ் பாதுகாப்பு கணிசமாக குறைக்கப்படும். டெல்லி காவல் துறையில் 86 ஆயிரம் போலீசார் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 7 ஆயிரம் போலீசார் விஐபி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2500 போலீசார் இசட் பிளஸ் பாதுகாப்பு பணிக்கும், மற்றவர்கள் ஐகோர்ட் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பலாத்கார வழக்கை அரிதான குற்றமாக கருத முடியாது. அதே சமயம் 6 பேர் சேர்ந்து கும்பலாக பலாத்காரம் செய்த சம்பவத்தை அரிதான குற்றமாக எடுத்துக் கொள்ளலாம். பலாத்கார குற்றத்தில் மரண தண்டனை பெற்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க நான் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். இவ்வாறு ஷிண்டே கூறினார்.