லண்டன் மக்கள் உற்சாகம் : உலகின் முதல் சுரங்க ரயில் சேவை 150வது ஆண்டு கொண்டாட்டம்
லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில், உலகின் முதல் சுரங்க ரயில் சேவை தொடங்கி நேற்றுடன் 150 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதை லண்டன் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இங்கிலாந்தில் கடந்த 1863ம் ஆண்டு.. ரயில், பஸ்களில் ஏகப்பட்ட கூட்டம். நெரிசலில் சிக்கி மக்கள் பயணம் செய்த காலம் அது. அப்போதுதான் உலகின் முதல் சுரங்க ரயில் பாதை லண்டனில் அமைக்கப்பட்டது. 1863ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி சுரங்க ரயில் சேவை தொடங்கியதும் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். முதலில் லண்டன் பிரிட்ஜ், ஊஸ்டன், படிங்டன், கிங்ஸ் கிராஸ் உள்பட 6 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.
இப்போது 207 ரயில் நிலையங்களுடன் சுரங்க ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. அதன் மூலம் போக்குவரத்து நெரிசலும் எதிர்பார்த்தபடியே குறைந்தது. இப்போது படிப்படியாக சுரங்க ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு புறநகர் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் 120 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். சுரங்க ரயில் நிலையங்கள் அருகில் ஏராளமான குடியிருப்புகள் அதன்பின் கட்டப்பட்டன. புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் லண்டனுக்கு குடியேறினர். இந்நிலையில், சுரங்க ரயில் போக்குவரத்து தொடங்கி 150வது ஆண்டு நிறைவை லண்டன் நகர மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.