மும்பை: கமலுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக பதில் கூறினார் சரிகா. கமல்ஹாசன் மனைவி சரிகா. அவரைவிட்டு பிரிந்து மும்பையில் வாழ்கிறார். அவர் கூறியதாவது: ‘கமலை விட்டு பிரிந்தபிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் நான் நன்கு அமைத்துக்கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து என் கவுரவத்தை யாரும் பறிக்க முடியாது. ‘மகள்கள் ஸ்ருதி, அக்ஷராவிடம் சினிமா பற்றி பேசுவீர்களா? என்கின்றனர். சினிமாவை யார் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லோரிடமும் அதுபற்றி பேசுவேன். மகள்களை பொறுத்தவரை ஸ்ருதி இசையில் ஆர்வம் கொண்டவர், அக்ஷரா மேற்கத்திய நடனம் கற்றவர்.
இருவருமே நடிகையாகலாம். ஆனால் அவர்கள் தங்களுக்கான இடத்தை பெற்றிருக்கிறார்கள். பெற்றோர்களுடன் பிள்ளைகளை ஒப்பிட கூடாது. அவர்கள் தங்களுக்கான அடையாளத்தை ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள். தற்போது நாங்கள் பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். தக்க இடத்தை பெறும் வரையில் மகள்களை விட்டு தள்ளியே இருப்பதுதான் அது. அவர்கள் என் மகள்கள். அவர்கள் எங்கும் போய்விடப்போவதில்லை, நானும் எங்கும் போய்விடப்போவதில்லை. மீண்டும் அவர்களின் கரத்தை எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்வேன். அவர்கள் சுதந்திரத்தில் நான் குறுக்கிடமாட்டேன். அதனால்தான் என் பேட்டிகளில் அவர்களைப்பற்றி விவாதிப்பதில்லை.
அவர்களின் காதல் விவகாரங்களிலும் நான் தலையிடுவதில்லை. அது அவர்களின் சொந்த வாழ்க்கை. ‘குழந்தைகளுக்காக கமலுடன் மீண்டும் வாழ்க்கையில் இணைவீர்களா? என்கின்றனர். அப்படியொரு விஷயம் நடக்க முடியாதபோது அது பற்றி ஏன் பேச வேண்டும்? யாரிடமும் நான் பேச தயாராக இல்லை. எனக்கும் என் மகள்களுக்கும் இடையில் என் வாழ்க்கையை போதுமான வகையில் அமைத்துக்கொண்டிருக்கிறேன். அதுபோதும். வாழ்க்கை என்பது இரண்டு வகை. ஒன்று எதில் தள்ளப்பட்டோமோ அதிலிருந்து விடுபடாமல் வாழ்வது. மற்றொன்று தினம் தினம் வாழ்க்கையை ரசித்து சந்தோஷமாக இருப்பது. இரண்டாவதை நான் தேர்வு செய்துகொண்டேன்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook