இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். அவரது மோசமான ஆட்டமும், விமர்சகர்களின் கருத்துகளை ஆமோதிப்பதாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் அவர் 2 இன்னிங்சிலும் சேர்த்து 16 (8, 8) ரன்களே எடுத்திருந்தார். இரு இன்னிங்சிலும் பனேசரின் பந்தில் வீழ்ந்தார். கடந்த 28 இன்னிங்சில் அவர் ஒரு சதம்கூட அடிக்கவில்லை. 2011ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுடன் அவர் அடித்த 146 ரன்களே அவரது கடைசி சதமாகும். 2005 முதல் 2007 வரை 17 இன்னிங்சில் அவர் சதம் அடிக்காமல் இருந்ததே அதிகபட்ச காலமாக இருந்தது.
ஆனால் தற்போது 28 இன்னிங்ஸ் ஆடியபோதும் கூட அவரால் சதம் அடிக்க முடியவில்லை. கடந்த 10 இன்னிங்சில் அவருடைய சராசரி 15.03 மட்டுமே. முன்னணி பேட்ஸ்மேன்களான புஜாராவின் சராசரி 79, கோஹ்லி 61, சேவாக் 40, காம்பீர் 27, டோனி 37 ஆகும். 8வது வீரராக களமிறங்கும் அஸ்வின் கூட கடந்த 10 இன்னிங்சில் 303 ரன்கள் குவித்து தனது சராசரியை 38க்கு உயர்த்தியுள்ளார். சச்சினின் மோசமான பார்ம் அவரை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. சச்சின் ஆட்டம் குறித்து கவாஸ்கர் கூறியதாவது: டெண்டுல்கர் நீண்ட காலமாக தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் கடந்த சில ஆட்டங்களில் அவர் அரைசதம் கூட எட்ட முடியாத போது விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்.
இந்திய அணி தேர்வாளர்கள் சச்சினின் எதிர்கால திட்டம் குறித்து அவரிடமே கேட்டு முடிவு எடுக்க வேண்டும். அவருடைய ஓய்வு தொடர்பாக எந்த முடிவாக இருந்தாலும் அது அவருடைய சொந்த முடிவாகவே இருக்கவேண்டும் இந்த தொடரில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் போராடி வருகிறார். மீண்டும் தனது பழைய பார்முக்கு வர அவர் முயற்சி செய்கிறார். முதல் இன்னிங்சில் பனேசர் வீசிய பந்து சுழன்று வந்து ஆப்- ஸ்டம்பை பதம் பார்த்தது. 2வது இன்னிங்சில் இதுபோன்று நடந்து விடக்கூடாது என்பதற்காக கிரீசை விட்டு வெளியே நின்று மிடில் ஸ்டம்பையும், ஆப் ஸ்டம்பையும் கவர் செய்து ஆடினார். ஆனால் பனேசரின் பந்து சுழலாமல் நேராக வந்ததால் எல்பிடபிள்யூ ஆனார். இவ்வாறு அவர் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook