விஜய் நோ சொன்ன கதை மகேஷ்பாபு ஓகே செய்தார் : கவுதம் மேனன் குஷி
சென்னை-: கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த ‘யோவான் அத்தியாயம் ஒன்று படத்தில் தற்போது மகேஷ்பாபு நடிக்கிறார். ‘துப்பாக்கி படத்தையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் ‘யோவான் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படத்தின் ஸ்கிரிப்ட் முற்றிலுமாக மேற்கத்திய பாணியில் இருந்ததால் அதை திருப்பாச்சி, சிவகாசி பட பாணிக்கு பொருந்துமாறு மாற்றவும் அதில் குத்து பாடல்களை சேர்க்கவும் விஜய் கேட்டிருந்தார். இதில் கவுதம் மேனனுக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து விஜய் அப்படத்தி லிருந்து விலகி கொண்டார். இந்நிலை யில் அதே ஸ்கிரிப்ட்டை டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபுவிடம் கவுதம் மேனன் கூறினார்.
அவருக்கு பிடித்திருந்ததால் அப்படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். இதுபற்றி கவுதம் மேனன் கூறியதாவது: யோவான் படத்தின் ஸ்கிரிப்ட்டை மகேஷ்பாபுவிடம் கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. இதையடுத்து இருவரும் அப்படத்தில் பணியாற்ற முடிவு செய்தோம். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாகும். ஏற்கனவே மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அது நடக்கவில்லை. இப்போது அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. தற்போது இருவரும் பணியாற்றிவரும் பட பணிகள் முடிந்ததும் எங்கள் படத்தின் வேலை தொடங்குவோம். ஸ்கிரிப்ட்டிலும் சிறிய மாற்றம் இருக்கும். இப்படத்தின் தலைப்பும் மாற்றப்படுகிறது. தலைப்பு முடிவானதும் அது பற்றி தெரிவிப்பேன்.