புதுடெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோர் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி, சமையல் கேஸ் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளால் மத்திய அரசு கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஊழல் புகார்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மக்களுக்கு விளக்கும் வகையிலும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பிரமாண்ட கூட்டம் நடத்தப்பட்டது. மைதானத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். 12 மணியளவில் பிரதமர், சோனியா, ராகுல் மைதானத்துக்கு வந்தனர். முதலில் ராகுல் பேசினார். அப்போது, தகவல் அறியும் உரிமை சட்டம் உள்பட மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், விரைவில் லோக்பால் மசோதாவும் நிறைவேற்றப்படும் என்றார். பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘கடந்த 8 ஆண்டுகளாக ஏராளமான சாதனைகளை செய்துள்ளோம். மகாத்மா காந்தி தேசிய கிராம வேலை உறுதி திட்டத்தால் 8 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். வேலைவாய்ப்புகளை உருவாக்க பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம். மத்திய அரசின் கொள்கை முடிவுகள் குறித்து சிலர் தவறான தகவல்களை மக்களிடம் பரப்புகின்றனர்Õ என்றார். சோனியா பேசுகையில், ‘எங்களுக்கு எதிரான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராடுவோம்Õ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook