பொள்ளாச்சி: பறவை காய்ச்சல் பீதியால் கேரளாவுக்கு செல்லாமல் ரூ.45 கோடி மதிப்பிலான 60 லட்சம் கறிக்கோழிகள் தேக்கமடைந்துள்ளன. கர்நாடகாவில் பறவை காய்ச்சல் பரவியதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கறிக்கோழி, குஞ்சு, முட்டை, தீவனம் கொண்டுவர கேரள அரசு கடந்த 30,ம் தேதி தடை விதித்தது. தமிழகத்தில் இருந்து பல்லடம், பொங்கலூர், உடுமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவது பாதிக்கப்பட்டது. தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கேரள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மருத்துவ பரிசோதனை சான்றிதழுடன் வரும் கறிக்கோழிகளை அனுமதிக்க கேரள அதிகாரிகள் முன்வந்தனர். பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லை எனும் சான்றிதழுடன் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கேரளாவுக்கு கொண்டு சென்றனர். ஆனால் கேரள செக்போஸ்ட்டில் உள்ள போலீசார், அதிகாரிகள் தங்களுக்கு கேரள அரசு உரிய உத்தரவு எதுவும் வழங்கவில்லை என்று கூறி அவற்றை கேரளாவுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் பொள்ளாச்சி மற்றும் கோவை அருகேயுள்ள தமிழக , கேரள செக்போஸ்ட் முன்பு நிறுத்தப்பட்ட கறிக்கோழிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் ஒவ்வொரு வாகனத்திலும் 200,க்கும் அதிகமான கறிக்கோழிகள் இறந்தன. பொள்ளாச்சி நடுப்புணி செக்போஸ்ட்டில் மட்டும் நேற்று 10 வாகனங்களில் இருந்த 2 ஆயிரம் கறிக்கோழிகள் இறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த வாகனங்கள் மீண்டும் பண்ணைகளுக்கு திரும்பின. கேரளாவுக்கு கொண்டு செல்லப்படாமலும், கொண்டு சென்ற கறிக்கோழிகள் திரும்பி வந்ததாலும் தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் ரூ.45 கோடி மதிப்பிலான 60 லட்சம் கறிக்கோழிகள் தேங்கியுள்ளன. கடந்த ஒரு வாரம் முன்பு கிலோ ரூ.60ஆக இருந்த பண்ணை கொள்முதல் மொத்த விலை தற்போது ரூ.50,க்கு கீழ் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக பண்ணைகளில் கறிக்கோழிகள் மேலும் தேக்கமடைந்து அடுத்த கட்ட உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படும் என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook