தமிழக நீதிமன்றங்களில் 11.83 லட்சம் வழக்குகள் : உச்சநீதிமன்ற நீதிபதி தகவல்
ஈரோடு: தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க 2 நாள் மாநில மாநாடு ஈரோட்டில் நேற்று நிறைவடைந்தது. நேற்று பொதுமாநாடு நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதிகள் கே.என்.பாஷா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பேசினர். உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா பேசியதாவது: நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் குறிப்பாக அத்தியாவசிய துறைகளை சேர்ந்த ஊழியர்கள் கூட வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதை பார்க்க முடிகிறது. நீதித்துறை ஊழியர்கள் ஒரு போதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது கிடையாது. இந்த நிலை வரும் காலங்களிலும் தொடர வேண்டும். தமிழகத்தில் 2006ம் ஆண்டில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 656 சிவில் வழக்குள், 4 லட்சத்து 13 ஆயிரத்து 153 கிரிமினல் வழக்குகள் என மொத்தம் 8 லட்சத்து 56 ஆயிரத்து 809 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இப்போது 7 லட்சத்து 15 ஆயிரத்து 702 சிவில் வழக்குகளும், 4 லட்சத்து 67 ஆயிரத்து 547 கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மொத்தமாக 11 லட்சத்து 83 ஆயிரத்து 249 வழக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 851 நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. வழக்குகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நீதிபதிகளுக்கும் வக்கீல்களுக்கும் பாலமாக இருக்கும் நீதித்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வுகாண வேண்டும். இவ்வாறு இப்ராஹிம் கலிபுல்லா பேசினார்.