நியூயார்க்: அமெரிக்காவில் வீசிய சாண்டி புயலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 80ஐ தாண்டி விட்டது. இந்நிலையில், வரும் 6ம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கான 100 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது. அதிபர் ஒபாமா, குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஆகியோர் மீண்டும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல், 2 நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியை தாக்கியது. பலத்த மழையுடன் சூறை காற்று சுழன்றடித்ததால் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட கிழக்கு மாநிலங்கள் பலத்த சேதம் அடைந்தன.
பஸ், ரயில், விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நியூயார்க் உள்பட பல நகரங்கள் இருளில் மூழ்கின. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. புயல் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் மரங்கள் வேரோடு பிய்த்து கொண்டு சரிந்தன. 80 லட்சம் வீடுகள், வியாபார நிறுவனங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சேவையை சரிசெய்யும் பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாண்டி புயலால் பாதிப்புக்கு ஆளான கிழக்கு கடற்கரை நகரங்களான வாஷிங்டன், பிலடெல்பியா, பாஸ்டன் நகரங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. அமெரிக்காவில் வரும் 6-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
புயலால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது அதிபர் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டுமானால் அதற்காக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அதற்கு சாத்தியமில்லை. எனவே, 6ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் புயல் பாதித்த பகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஒபாமா, குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஆகியோர் மீண்டும் தங்கள் பிரசாரத்தை நேற்று தொடங்கினர். வரும் செவ்வாய்க்கிழமை காலை வரை இடைவிடாமல் இருவரும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போதைய கருத்து கணிப்பில் இருவரும் 48 புள்ளிகள் பெற்று சமமாக இருக்கின்றனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook