சித்தூர்: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ‘வஸ்துன்னா மீகோசம்’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள கட்வாலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். அங்கு சிறிய மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். கூட்டம் முடிந்து கீழே இறங்க முயன்றபோது, தொண்டர்கள் அவருடன் கை குலுக்குவதற்காக முண்டியடித்துக் கொண்டு மேடையில் ஏறினர். இதனால் பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. இதில், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கீழே விழுந்தனர். உடனடியாக பாதுகாப்பு படையினர் சந்திரபாபுவை தூக்கினர். பின்னர், கட்சியினருடன் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து பாதயாத்திரை மேற்கொண்டார். ஒரு கி.மீ. தூரம் சென்ற நிலையில், அவருக்கு முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சந்திரபாபு நாயுடுவை சோதித்தனர். மேடையில் இருந்து கீழே விழுந்ததில், முதுகில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. இதனால் பாதயாத்திரை மேற்கொள்ளாமல் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து, தற்காலிகமாக பாதயாத்திரையை கைவிட்டு கேரவன் வேனில் சந்திரபாபு நாயுடு ஓய்வு எடுத்தார்.
பின்னர் ஐதராபாத்தில் இருந்து மருத்துவ குழுவினர் வந்தனர். சந்திரபாபு நாயுடுவுக்கு சிகிச்சை அளித்தனர். முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் நாள் முழுவதும் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அதன்பேரில், சந்திரபாபு நாயுடுவின் பாதயாத்திரை நேற்று ரத்து செய்யப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சந்திரபாபு மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் நேரில் சென்று சந்திரபாபுவிடம் உடல்நலம் விசாரித்தனர். அப்போது நான் நன்றாக இருக்கிறேன். என்னை காண தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என சந்திரபாபு கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு குணமடைய வேண்டி சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் சிறப்பு யாகம் செய்தனர்.