காட்டுமன்னார்கோவில்: கள்ளக்காதலால் பிஎட் மாணவி கொல்லப்பட்டாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 5 பேரை தேடி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கரையின் மேற்கு குளக்கரையில் நேற்றிரவு வாலிபர் ஒருவர் கத்தியால் வெட்டுப்பட்டு கிடந்தார். அவரது மடியில் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அந்த வாலிபர், காட்டுமன்னார்கோவில் பெரியார் நகர் நேதாஜி வீதியை சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் என்றும், அந்தப்பெண் பக்கத்து வீட்டை சேர்ந்த சுகன்யா (22) என்றும் தெரியவந்தது.
ஸ்ரீமுஷ்ணம் தனியார் கல்லூரியில் பிஎட் படிக்கும் சுகன்யாவை, பைக்கில் அழைத்து வந்தபோது, 5 வாலிபர்கள் தங்களை வெட்டியதாகவும், இதில் சுகன்யா இறந்து விட்டதாகவும் அந்த வாலிபர் கூறினார். இதையடுத்து சுகன்யாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. செந்தாமரைக்கண்ணனும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போலீசார் கூறியதாவது: செந்தாமரைக்கண்ணன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லூரி மாணவி சுகன்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி வெளியில் சென்று வந்துள்ளனர். பைக்கில் துரத்தி வெட்டியதாக கூறப்படும் 5 பேரில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் உள்பட 5 பேரையும் தேடிவருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர். இளம்பெண் கொலை கள்ளத்தொடர்பால் நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா? மாணவியை 5 பேரும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது ஏற்பட்ட தகராறில் நடந்தா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook