காட்டிற்கு அழைத்துச் சென்று பல் மருத்துவ கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி
சித்தூர்: பல் மருத்துவ கல்லூரி மாணவியை காட்டிற்கு அழைத்து சென்று கொல்ல முயற்சித்த காதலனை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லூர் மாவட்டம் சீதாராமபுரம் மண்டலத்தை சேர்ந்தவர் 21 வயது பெண். இவர், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார். இவர், குப்பத்தில் தங்கி கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 3 மாதத்துக்கு முன்பு மருத்துவமனைக்கு வந்த குப்பம் அடுத்த குப்பிதானி பள்ளி கிராமத்தை சேர்ந்த பாஸ்கர்(22) என்பவருக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்தனர். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண், பாஸ்கருக்கு போன்செய்து வி.கோட்டாவுக்கு அழைத்தாராம். இதையடுத்து பாஸ்கர் பைக்கில் வி.கோட்டா சென்று காதலியை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார். பின்னர் மாலை 6 மணியளவில் ஆந்திரா-கர்நாடகா எல்லையில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மீண்டும் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து காதலியை வலுக்கட்டாயமாக பாஸ்கர் பலாத்காரம் செய்து கழுத்து நெரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் காதலி மயங்கி விழுந்ததால் அவர் இறந்துவிட்டதாக கருதி பாஸ்கர் பைக்கில் தப்பிச் சென்றார். இரவு 9 மணியளவில் மயக்கம் தெளிந்த இளம்பெண் அருகே உள்ள கிராமத்துக்கு நடந்து வந்து அங்குள்ளவர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து அவரை குப்பம் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த குடிபல்லி போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான காதலனை தேடிவருகின்றனர்.