டோக்யோ: ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இன்று காலை மூன்றாவது அணு உலை பகுதியிலும் வெடிப்பு ஏற்பட்டது. இந்த அணு உலையில் கடல்நீரை செலுத்த முடியாமல் போனதால், அணு உலையின் இரும்புக் கொள்கலன் உருகி மிகப்பெரிய கதிர்வீச்சு தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 4வது அணுஉலை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பசிபிக் கடலில் மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் பல நகரங்கள் சூறையாடப்பட்டன. 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பூகம்பத்தால் ஜப்பான் அணுமின்நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. புகுஷிமா டைசி மின்நிலையத்தில் மின்தடை காரணமாக அணு உலைகளின் கூலிங் சிஸ்டங்கள் செயல் இழந்தன. இதனால் முதல் யூனிட் அணுஉலையில் வெப்பம் அதிகரித்து கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புகுஷிமா பகுதியில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
அணுஉலை பகுதியில் ஹைட்ரஜன் அழுத்தத்தால் அதன் பாதுகாப்பு கான்கிரீட் சுவர் இரண்டு நாட்களுக்கு முன் வெடித்தது. கதிர்வீச்சு தாக்கம் இருந்ததால், புகுஷிமா பகுதியில் தங்கியிருந்த மக்களிடம் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இதில் 22 பேர் கதிர்வீச்சு தாக்குதலுக்கு ஆளாகியிருந்தது தெரிந்தது. அணு உலையில் யுரேனியம் எரிபொருள் உருகுவதை தடுக்க, கடைசி முயற்சியாக கடல்நீர் செலுத்தப்பட்டது. இதையடுத்து மற்ற அணுஉலைகளிலும் கூலிங் சிஸ்டங்கள் ஒவ்வொன்றாக செயல் இழந்தன. இதனால் பல அணு உலைகளில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. புகுஷிமா அணுமின் நிலையத்தின் 3வது யூனிட் அணுஉலையில், வெப்பம் அதிகரித்து அதன் பாதுகாப்பு கான்கிரீட் சுவர் நேற்று வெடித்தது. இதையடுத்து அந்த உலையிலும் கடல் நீர் செலுத்தப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
இந்நிலையில் 2வது யூனிட் அணு உலையில் இன்று காலை வெடிப்பு ஏற்பட்டது. இது கூலிங் ஏரியா பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் அழுத்த அறையில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2ம் யூனிட் அணுஉலையில் கடல் நீரை செலுத்த அணுமின்நிலைய விஞ்ஞானிகள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அணு உலைக்குள் கடல்நீரை செலுத்த வேண்டும் என்றால், அதனுள் இருக்கும் கதிரியக்க நீராவியை முதலில் வெளியேற்ற வேண்டும். அதன் வால்வில் பிரச்னை ஏற்பட்டதால், நீராவியை வெளியேற்ற முடியவில்லை. இதனால் வெகுநேரம் அணு உலையில் நீர் இல்லாமலே யுரேனியம் உருகி அதிகஅளவு வெப்பத்தை வெளிப்படுத்தியது. ஒருவழியாக அணுஉலையின் வால்வை இன்று அதிகாலை திறந்து நீராவியை வெளியேற்றியபின், கடல்நீர் செலுத்தப்பட்டது. ஆனால் அணுஉலையில் போதிய அளவு கடல்நீர் நிரம்பவில்லை. இந்த நிலை நீடித்தால் அணு உலையில் வெப்பம் அதிகமாகி, இரும்புக்கலனே உருகும் நிலை ஏற்படும்.
அப்போது மிகப்பெரிய கதிர்வீச்சு தாக்கம் ஏற்படும். இந்நிலையில் 4வது அணுஉலை பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது அணு மின்நிலையப் பகுதியில் கதிர்வீச்சின் அளவு 8,217 மைக்ரோ சிவெர்ட்ஸாக உள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகம். இதனால் இப்பிரச்னையை சமாளிக்க முடியாமல் ஜப்பான் விஞ்ஞானிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவிடம் ஜப்பான் தொழில்நுட்ப உதவி கேட்டதையடுத்து, 2 நிபுணர்களை அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. புகுஷிமா அணுமின்நிலையத்தில் தற்போதைய நிலைமை குறித்து டோக்கியோ மின்துறை அதிகாரிகள் மீடியாக்களுக்கு விரிவான தகவல்களை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஜப்பான் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook