கும்பகோணம்: வலிப்பு நோயால் மகனும், புற்று நோயால் மகளும் பாதிக்கப்பட்டதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தொழிலாளி, வாழ்வதா, சாவதா என்பதை முடிவு செய்ய சீட்டு குலுக்கி போட்டார். அதில் சாவு என்ற சீட்டு வந்ததால் அனைவரும் தூக்க மாத்திரை சாப்பிட்டனர். லாட்ஜ் ஊழியர்கள் சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் 4 பேரும் பிழைத்தனர். திருப்பூர் துவாரகை நகரை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (57). இவர் கார்மென்ட்ஸ் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமாராணி (45). இவர்களின் மகன் அருண் (21), மகள் ஜனனி (19), கல்லூரி மாணவி. அருண் வலிப்பு நோயாலும், ஜனனி நுரையீரல் புற்று நோயாலும் அவதிப்பட்டு வந்தனர். இவர்களது சிகிச்சைக்காக நகைகளை விற்றும், கடன் வாங்கி செலவழித்தும் நோய் தீரவில்லை. இதனால் சூரியபிரகாஷ் தம்பதியினர் நரக வேதனை அனுபவித்து வந்தனர். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் கும்பகோணம் வந்தனர். புதிய பஸ் நிலையம் அருகே ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். கும்பகோணம் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மாலையில் லாட்ஜ்க்கு திரும்பினர்.
டிபன் சாப்பிட்டு விட்டு குடும்ப சூழ்நிலை குறித்தும், தன்னுடைய திட்டம் குறித்தும் குழந்தைகளிடம் சூரியபிரகாஷ் கூறினார். வாழ்வதா, சாவதா என சீட்டு குலுக்கி போடுவோம். சாவு என்ற சீட்டு வந்தால் அனைவரும் தற்கொலை செய்து கொள்வது என்ற தனது முடிவை குழந்தைகளிடம் தெரிவித்தார். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். வாழ்வு என ஒரு சீட்டிலும், சாவு என இன்னொரு சீட்டிலும் எழுதி போட்டனர். அதில் ஒரு சீட்டை மகள் ஜனனியே எடுத்தார். அதில் சாவு என்ற சீட்டு வந்தது. எனவே சாகலாம் என ஒருமனதாக முடிவு செய்தனர். அருண் தினமும் சாப்பிடும் தூக்க மாத்திரையை எடுத்து அனைவரும் 4 மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு படுத்துக்கொண்டனர். சக்திகுறைந்த மாத்திரை என்பதால் அவர்கள் அனைவரும் மயக்க நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டே இருந்தனர். மாலை வரை அறையில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கதவை தட்டிப்பார்த்தனர். பதில் இல்லாததால் குடந்தை மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது சூரியபிரகாஷ் குடும்பத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook