புதுடெல்லி: சிஏஜி அறிக்கை இறுதியானது என்றால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ள பா.ஜ. ஆளும் மாநில முதல்வர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என பா.ஜ. வலியுறுத்தி வருகிறது. கடந்த 9 நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. இந்நிலையில், சிஏஜி குற்றச்சாட்டுக்கு ஆளான பா.ஜ. முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் மன்மோகன் சிங்கை பதவி விலக சொல்வது எந்த வகையில் நியாயம் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிஏஜி அறிக்கையை வைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ. முயன்று வருகிறது. சிஏஜி அறிக்கை இறுதியானது என்றால் முதலில் அவர்கள் சட்டீஸ்கர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்படுத்திய முதல்வர் ராமன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் மீது முதலில் நடவடிக்கை எடுத்துவிட்டு, பிறகு மத்திய அரசை கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக மாநில அரசுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்கு அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பா.ஜ. ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மணிஷ் திவாரி சுட்டிக் காட்டினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook