புதுடெல்லி: டெல்லியில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரின் அத்துமீறல் காரணமாக ஸ்கூட்டரில் சென்ற பயணி படுகாயமடைந்ததால் ஆத்திரமடைந்த மக்கள், வன்முறையில் இறங்கினர். போலீஸ் ஸ்டேஷன், பெட்ரோல் பங்க் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறை கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் இறந்தார். புதுடெல்லி மயூர்விஹார் பகுதியில் நேற்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் வந்த இருவரை பிடித்து அபராதம் விதித்தனர். அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஸ்கூட்டரில் ஏறி தப்ப முயன்றனர். அவர்களை போலீஸ்காரர் ஒருவர் பிடித்து இழுத்தார்.
இதனால், ஸ்கூட்டரில் இருந்த ஒருவர், நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் பரவியதும் அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் மயூர்விஹார் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குவிந்தனர். திடீரென போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். போலீஸ் ஸ்டேஷனுக்கும் அருகில் இருந்த பெட்ரோல் பங்க்குக்கும் தீ வைத்தனர். அங்கிருந்த பல்வேறு வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. அங்கு பதற்றம் ஏற்பட்டதால் கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது.
வன்முறையாளர்களை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. அது பலன் அளிக்காததை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர், குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தார். 5 போலீசார் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இரவு 10.30 மணி அளவில் வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மயூர்விஹார் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு பணியில் 1600-க்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 500 மீட்டர் இடைவெளியில் சாலையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook