சென்னை: மானாவாரி விவசாயத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு பரிசு வழங்க ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து, மாநிலத்திலேயே அதிக விளைச்சலை பெறும் விவசாயிக்கு, ஆண்டுதோறும் சிறப்பு பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3,500 மதிப்புள்ள பதக்கத்தை குடியரசு தினத்தன்று வழங்க முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மானாவாரி நெல், சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகளில் உற்பத்தியை அதிகரிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல் (மானாவாரி), சோளம் (மானாவாரி மற்றும் இறவை), கேழ்வரகு (மானாவாரி மற்றும் இறவை), சாமை (மானாவாரி), துவரை (மானாவாரி மற்றும் இறவை), பச்சைப் பயறு (மானாவாரி மற்றும் இறவை), உளுந்து (மானாவாரி மற்றும் இறவை) ஆகிய பயிர்களின் சாகுபடியில் அதிகமான மகசூல் பெறும் விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர்.
ஒவ்வொரு இனத்துக்கும் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விருதுகள் வழங்குவதற்காக ரூ.11.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நவீன தொழில்நுட்பங்களை கடைபிடித்து நெல் (மானாவாரி), சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகள் உற்பத்தி திறனை அதிகரிக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook