நாமக்கல் :நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கடந்த 2010, 2011ம் ஆண்டில் சுகாதாரக்குறைவான தொழில் செய்யும் பெற்றோரின் குழந்தைகளுக்கு வழங்கிய கல்வி உதவித்தொகையில் ரூ. 81 லட்சம் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 77 தலைமை ஆசிரியர், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர், கண்காணிப்பாளர் என 79 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2008 முதல் 2010ம் ஆண்டில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இத்துறை மூலம் அளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ. 1 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக 12 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட உதவித்தொகையிலும் இது போன்ற மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதிகாரிகள் குழு ஆதிதிராவிடர்நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை தொடர்பான பைல்களை ரெக்கார்டு ரூமில் ஆய்வு செய்தது. இதில் 2003ம் ஆண்டு முதல் 2010 வரையிலான 8 ஆண்டு பைல்களை காணவில்லை. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பைல்கள் மாயமானதில் பல அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து இந்த வழக்கை நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றி நாமக்கல் எஸ்.பி கண்ணம்மாள் நேற்று உத்தரவிட்டார். கடந்த 2003ம் ஆண்டில் இருந்து ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய மாவட்ட அதிகாரி, உதவி அக்கவுன்ட்ஸ் ஆபீசர், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் என பலரிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook