நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க அளிக்கப்பட்ட ரூ.20 கோடி மானியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் இருந்து வந்துள்ள தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் 3 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். இதில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என தெரிகிறது. விவசாயத்தை மேம்படுத்த அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. தென்னை, வாழை, குச்சிகிழங்கு, கத்தரி, வெண்டை போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அளிக்கப்படுகிறது. குறைந்த தண்ணீரை கொண்டு அதிக மகசூல் பெற முடியும் என்பதால் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு அரசு மானியம் அளிக்கப்படுகிறது. உரம், விதை மற்றும் சொட்டு நீர்ப்பாசன கருவிகள் கடந்த சில ஆண்டுக்கு முன்பு 50 சதவீத மானியத்தில் அளிக்கப்பட்டது. தற்போது 100 சதவீத மானியம் தரப்படுகிறது. மானியம் பெறும் விவசாயிகள் குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். அதிக பட்சம் 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.42 ஆயிரம் வரை அரசு மானியம் அளிக்கிறது. இந்த மானியத்தொகை விவசாயிகளின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிரின் தன்மைக்கு ஏற்ப சொட்டு நீர்ப்பாசன கருவியாக அளிக்கப்படுகிறது. தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் விவசாய நிலத்தை ஆய்வு செய்து, கருவிகளை சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு மானிய தொகையை அளிப்பர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2007 முதல் 2011 வரை சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க மானியமாக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பல முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சென்னை தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குனர் முத்துசாமி தலைமையில் துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் உள்பட 6 பேர் நாமக்கல் மாவட்டத்தில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுடன் மாவட்டத்தில் பணியாற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளை கொண்ட 7 குழுவினரும் ஆய்வுப் பணி மேற்கொண்டுள்ளனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள சொட்டு நீர்ப்பாசன மானியம் அளிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் பட்டியலுடன் விவசாய தோட்டங்களுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. நிலமில்லாத தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் பெயரில் 10 ஆண்டுக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்த பத்திரமும் போலியாக உள்ளது போன்ற முறைகேடுகள் ஆய்வின்போது தெரியவந்துள்ளது. இன்று 3வது நாளாக ஆய்வு நடக்கிறது. இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் குமரகுருபரன் கூறுகையில், ‘‘சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அரசு அளிக்கும் மானியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது. மாவட்டத்தில் கொல்லிமலையை தவிர மற்ற 14 ஒன்றியங்களிலும் இத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் 10 ஒன்றியங்களில் ஆய்வு முடிந்துள்ளது. இன்றும் ஆய்வு தொடர்கிறது. அக்குழுவினர் முறைகேடு குறித்து நாளை அறிக்கை அளிக்க உள்ளனர். அதன் பிறகே தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‘‘ என்றார். இந்த மோசடியில் உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலரும் சிக்கு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook